tamilnadu

img

புற்றுநோய்க்கு பரிந்துரைக்கப்படும் 9 மருந்துகளின் விலை 87% குறைப்பு!

புற்றுநோய் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்படும் 9 மருந்துகளின் விலையை 87% வரை தேசிய மருந்துகள் விலை நிர்ணய ஆணையம் குறைத்துள்ளது. 

புற்றுநோய் சிகிச்சைக்காக நோயாளிகள் மற்றும் அவர்கள் குடுப்பத்தினர் அதிக அளவில் செலவு செய்யவேண்டி இருந்த நிலையில், மலிவான விலையில் மருந்துகள் வாங்கும் விதத்தில், தேசிய மருந்துகள் விலை நிர்ணய ஆணையம் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மருந்து தயாரிப்பவர்கள், சில்லறை மருந்து விற்பனையாளர்கள் உள்ளிட்டோரிடம் நடத்திய ஆய்வுகளின் அடிப்படையில், புற்றுநோய் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்படும் 9 மருந்துகளின் விலையை 87 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது.

நுரையீரல் புற்றுநோய்க்கான கீமோதெரபி சிகிச்சைக்கு பயன்படும் இன்ஜெக்ஷன் பேமெட்ரெக்ஸ்ட் (500 mg) மருந்து விலை 22,000 ரூபாயில் இருந்து 2,800 ரூபாயாகவும், பேமெட்ரெக்ஸ்ட் (100 mg) விலை 7,700 ரூபாயில் இருந்து 800 ரூபாயாகவும், எப்பிரூபிசின் (50 mg) மருந்து விலை 2,662 ரூபாயில் இருந்து 960 ரூபாயாகவும், எப்பிரூபிசின் (10 mg) மருந்து விலை 561 ரூபாயில் இருந்து 276.8 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. 

அதேபோல், எர்லோடினிப் (150 mg) மருந்து விலை 8,800 ரூபாயில் இருந்து 2,400 ரூபாயாகவும், எர்லோடினிப் (100 mg) மருந்து விலை 6,600 ரூபாயில் இருந்து 1,840 ரூபாயாகவும், எவரோலிமஸ் (0.5 mg) மருந்து விலை 1,452 ரூபாயில் இருந்து 739 ரூபாயாகவும், எவரோலிமஸ் (0.25 mg) மருந்து விலை 726 ரூபாயில் இருந்து 406 ரூபாயாகவும், ஹார்மோன் தெரபி சிகிச்சைக்கான லியுப்ரோலைட் அசிடேட் இன்ஜெக்ஷன் விலை 3,990 ரூபாயில் இருந்து 2,650 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. 

கடந்த பிப்ரவரி மாதம் புற்றுநோய்க்கான 42 மருந்துகள் விலை 30% வரை குறைக்கப்பட்ட நிலையில், நடப்பு ஆண்டில் தற்போது மீண்டும் விலை குறைக்கப்பட்டுள்ளது. விலை குறைப்பை தொடர்ந்து மருந்து உற்பத்தி அளவை குறைக்க கூடாது என்று தயாரிப்பு நிறுவனங்களுக்கு சுகாதாரத் துறை அறிவுறுத்தி உள்ளது. 

இந்த விலை குறைப்பால் இந்தியாவில் புற்றுநோய் பாதிக்கப்பட்ட 22 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பயன்பெறுவார்கள். மருந்துக்காக அவர்கள் செலவழிக்கும் தொகையும் சுமார் 800 கோடி ரூபாய் வரை குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.